உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வைகோ | படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: “தேர்தலுக்குப் பிறகு கருவேலம் மரங்களை அகற்றும் பணியில் நேரடியாக ஈடுபடுவேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தமிழகம் முழுவதும் படர்ந்துள்ள விவசாயத்தை அடியோடு அழிக்கும், சுற்றுச்சூழலை நாசமாக்கும், விவசாயிகளின் எதிர்காலத்தை சூன்யமாக்கும் வேலி கருவேல நச்சு மரங்களை அடியோடு அகற்றக் கோரி 11 ஆண்டுக்கு முன்பு பொது நல வழக்கு தொடர்ந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற அமர்வு, சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் பணியில் மாவட்ட ஆட்சியர்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். இதை வழக்கறிஞர்கள் குழு கண்காணிக்க வேண்டும், இந்தப் பணிக்காக ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைத்தும் இறுதி தீர்ப்பு அளித்துள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக 39 வழிகாட்டுதல்களும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிபதிகளுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் நன்றிக் கடன்பட்டுள்ளது.
சீமை கருவேல மரங்களை அகற்றுவதில் கேரளாவை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். கேரளாவில் முளைக்கும்போதே வேறுடன் பிடுங்கிவிடுவார்கள். தமிழகத்தில் 60-களில் விறகுக்காக பயன்படும் என்று கூறி சீமை கருவேல விதைகளை விதைத்தார்கள். இப்போது விறகுக்கு பயன்படுத்துப்படுது இல்லை.
சீமை கருவேல மரங்கள் வளர்ந்துள்ள பகுதியில் ஆடு, மாடுகள் நிற்காது, சினை பிடிக்காது. பறவைகள் கூடு கட்டாது. முட்டையிடாது. பிராண வாயுக்களை உறிஞ்சிக் கொண்டு கார்பன்டை ஆக்சைடு வெளியிடுகிறது. 50, 100 அடி ஆழம் வரை வேர்விடும். மேல்மட்டத்தில் வெட்டினால் 20 நாளில் வளர்ந்துவிடும்.
எனவே கட்சி, சாதி, மதம் இல்லாமல் செந்தமிழ் நாட்டில் விவசாயம், சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைத்து துறையினரும் இணைந்து போர்கால அடிப்படையில் சீமை கருவேல மரங்களை அகற்றும் பணியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பின்பு நானே நேரடியாக சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபடுவேன். பொதுமக்களும் தங்கள் பகுதிகளில் இருந்து வீடுகளுக்கு அருகில் இருந்தே கருவேல மரங்களை அகற்றும் பணியை தொடங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.