சென்னை: தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்க்கு, தவெக பெண் தொண்டர்கள் அளித்த ஆதரவு குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அரசியல் விமர்சகரும், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகருமான பொன்ராஜ், அவர்கள் குறித்து இழிவாகப் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இது தொடர்பாக தவெக தலைவரும், தற்போதைய தமிழக முதல்வருமான விஜய் தேர்தலுக்கு முன்பாக டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் சென்று பொன்ராஜுக்கு எதிராக புகார் அளித்தார்.
மேலும் தவெக நிர்வாகிகள் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர். கடலூர் தவெக மாவட்டச் செயலாளரும், தற்போதைய கடலூர் எம்எல்ஏ-வுமான பி.ராஜ்குமார் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தேர்தலுக்கு முன்பாக அளிக்கப்பட்ட இந்த புகார்களின் அடிப்படையில், பொன்ராஜுவுக்கு எதிராக சென்னை சைபர் க்ரைம் போலீஸாரும், கடலூர் புதுநகர் போலீஸாரும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்குகளில் தனக்கு முன்ஜாமீன் கோரி பொன்ராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திரித்து கூறப்பட்டுள்ளது என்றும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசியல் ரீதியாக கருத்து மற்றும் பேச்சுரிமையை முடக்கும் வகையில் தனக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.