தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று பாஜக தொடர்ந்து சொல்லிவரும் நிலையில் இதுபற்றி தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவிடம் பேசவேண்டிய விஷயம் அது என்று முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும், அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பான எல்லா விஷயங்களையும் இப்போதே போட்டு உடைக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுராந்தகத்தில் நடைபெற்ற முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அடுத்த பிரச்சார பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக மக்கள் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கிறது. எல்லா கட்சிகளும் கூட்டணியை முடிவு செய்துவிட்டது என்று சொல்ல முடியாது. திமுக கூட்டணிக் கட்சிகள் பல ஆண்டுகளாக ஒரே கூட்டணியில் இருந்தாலும் இன்னும் கூட்டணியை உறுதிப்படுத்த முடியவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி சரியான நேரத்தில் வலுப்பெற்று வரும். தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சிகளின் தேர்தல் அறிக்கை தமிழக மக்களின் விருப்பத்துக்கும் எதிர்பார்ப்புக்கும் ஏற்றது போல இருக்கும். மதுரை பொதுக்கூட்டத்துக்கு முன்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருமா, வராதா? என்பதை இப்போது சொல்ல முடியாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஆட்சியில் பங்கு கேட்பது திமுக, காங்கிரஸ் பிரச்சினை. கருணாநிதி ஏற்கெனவே கூடா நட்பு கேடில் முடியும் என்று கூறியுள்ளார். இது எப்போதும் பொய்த்தது இல்லை. திமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்படும் போதெல்லாம் தமிழர்கள் தலைகுனியும் நிகழ்வுகளும், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. பாமக பூசல் பற்றி பேச வேண்டியதில்லை. அன்புமணி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளார். கூட்டணி வெற்றிக்காக அவர் உழைக்கிறார். அதை மட்டும் பார்த்தால் போதும். அதிமுகவிடம் அதிகாரத்தில் பங்கு கேட்பது தொடர்பான எல்லா விஷயங்களையும் இப்போதே போட்டு உடைக்க வேண்டும் என்று அவசியமில்லை.
நாட்கள் உள்ளன. தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பேச வேண்டிய விஷயம் அது. தேர்தல் முடிவுகள் முதல்வர் விரும்புவது போல் இருக்காது. திமுக தனித்தும் ஆட்சிக்கு வர முடியாது. கூட்டணியாக சேர்ந்தும் ஆட்சிக்கு வர முடியாது. எந்த இன்ஜின் எப்படி என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரிந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.