‘விடுதலைக்’ கட்சியில் இருக்கும் ‘அரசு’ புள்ளியானவர் கடந்த முறை வடமாவட்டத்தின் ’ஸ்கை ஊர்’ தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனார். அதனால் இம்முறை வடக்கை தவிர்த்து தெற்கில் தனது சொந்த ஊர்ப் பக்கம் நின்று பார்க்கலாம் என கணக்குப் போடுகிறாராம். அதற்காக ‘அவார்டு’ மாவட்டத்தில் இருக்கும் அம்மன் கோவில் தொகுதியை குறிவைத்திருக்கிறாராம்.
அண்மையில் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் அறிமுகம் என ‘அம்மன் கோயில்’ தொகுதிப் பக்கம் கூட்டம் போட்டுப் பேசிவிட்டு வந்திருக்கும் அரசர், இன்னொரு பயணம் வந்து, தன்னோடு படித்த பழைய நண்பர்களை எல்லாம் நேரில் சந்தித்துப் பேசிவிட்டுப் போயிருக்கிறார்.
சூரியக் கூட்டணியில் கடந்த முறை இந்தத் தொகுதி கதர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாகவே அந்தக் கட்சியின் வேட்பாளர் திடீரென காலமாகிவிட்டார். இப்போது இலைக் கட்சியின் வசத்தில் இருக்கும் அந்தத் தொகுதியில் இம்முறை கதர் கட்சிக்காக உரிமை கொண்டாட ’சத்தான’ புள்ளிகள் யாரும் இல்லையாம்.
அதனால், சூரியக் கூட்டணியில் ‘அம்மன் கோயில்’ தொகுதியை தனக்காக ஒதுக்குவதில் சிக்கல் ஏதும் இருக்காது என்று கணிக்கிறாராம் ‘விடுதலைக்’ கட்சியின் விவேகமான அரசர். இந்தத் தொகுதிக்காக தோழர்களும் உரிமை கேட்டு வரலாம் என்பதால் எதற்கும் இருக்கட்டுமே என பக்கத்திலுள்ள அருவி மாவட்டத்தின் ‘கோவில்’ தொகுதியையும் கோடுபோட்டு வைத்திருக்கிறாராம் அரசர்.