தமிழகம்

கோட்டை ‘மலை’ தொகுதியில் இலை கட்சியின் மாற்று திட்டம்| உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

கோட்டை மாவட்டத்தின் ‘மலை’ தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை வெற்றிக் கொடி நாட்டி இருக்கும் இலைக் கட்சியின் ’விஜயமான’ முன்னாள் மாண்புமிகுவுக்கு இம்முறை அங்கே அவ்வளவு சாதகமாக இல்லையாம். ‘இவர் மூன்று முறை வென்றுவிட்டார்... புதியவர் வரட்டுமே’ என்ற அலுப்பும் எதிர்பார்ப்பும் இதற்கு முக்கியக் காரணமாம்.

இதேபோல் இதே மாவட்டத்தின் அதிகாரக் கட்சி ‘ட்ரூலி’ நாதன் மாண்புமிகுவுக்கும் அவரது ‘குடி’ தொகுதியில் சிக்கலோ சிக்கலாம். “அரண்மனை சிப்பந்தியாய் இருந்தும் என்னத்த சாதிச்சுப்புட்டார்?” என்று சொந்த சாதி சனங்களே சத்தமாக கேள்வி கேட்கிறதாம். அதனால், ‘ட்ரூலி’ நாதனை இம்முறை இலைக் கட்சியின் விவரமான ‘விஜயமானவர்’ போட்டியிடும் ‘மலை’ தொகுதியில் நிறுத்தி அவருக்கு சரியான போட்டியைக் கொடுக்கும் திட்டத்தில் இருக்கிறதாம் அதிகாரக் கட்சி.

‘மலை’ தொகுதியில் ‘ட்ரூலி’ நாதனின் சாதி சனத்தின் ஓட்டே சுமார் 70 ஆயிரம் வரைக்கும் இருப்பதையும் கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்கு வந்திருக்கிறதாம் ஆலயக் கட்சி தலைமை.

          
SCROLL FOR NEXT