அண்மையில் அறிவாலயப் பிரவேசம் செய்த ‘ட்ரீட்மென்ட்’ புள்ளி, ஜாகை மாறும் திட்டத்தில் இருப்பதாக மாதக் கணக்கில் செய்திகள் வெளியாகிக் கொண்டே இருந்தது. என்றாலும் அதை எடுத்துக் கூட்டி செய்ய மண்டலத்தைச் சேர்ந்த அதிகாரக் கட்சியினர் யாரும் உரிய முயற்சிகளை எடுக்காமல் இருந்தார்களாம்.
அதற்குக் காரணம், ‘ஏற்கெனவே இருக்கிற பஞ்சாயத்துல இவர் வேற வந்துட்டா என்ன செய்யுறது?’ என்ற ‘எச்சரிக்கை’ உணர்வு தானாம். இதைப் புரிந்து கொண்டு கொங்கு மண்டலத்தின் ‘தில்’லானவர் கண்டம் விட்டு கண்டம் தாவி வந்து ‘ட்ரீட்மென்ட்’ புள்ளியைச் சந்தித்து உடைத்துப் பேசினாராம்.
அப்போது, “எனக்கும் வயசாயிருச்சு... ஓபன் ஹார்ட் சர்ஜரி வேற பண்ணிருக்கேன். அதனால, எனக்குப் பதிலாக என்னோட தொகுதியில எம் பையனக் கொண்டு வரலாம்னு நினைக்கிறேன். அதுக்கு உத்தரவாதம் தந்தீங்கன்னா உங்க பக்கம் வந்துடுறேன்” என்று சொன்னாராம் மிஸ்டர் ‘ட்ரீட்மென்ட்’. இதை அப்படியே ‘தில்’லானவர் தலைமைக்கு தெரிவித்து சம்மதம் பெற்ற பிறகு தான் ‘ட்ரீட்மென்ட்’ புள்ளி அறிவாலயப் பிரவேசத்துக்கு ஆயத்தமானாராம்.
‘ட்ரீட்மென்ட்’ புள்ளியின் ‘நாடு’ தொகுதியில் அவருக்குப் பதிலாக அவரது வாரிசு இம்முறை சூரியக் கட்சி பிரதிநிதியாக களத்துக்கு வருவார் என எதிர்பார்க்கலாம். ஒருவேளை, பிராண்ட் வேல்யூவூக்காக நீங்களே நிற்க வேண்டும் என்று திமுக சொன்னாலும் தனது மகனுக்கு கட்சி பதவி வாங்கிக் கொண்டு அதற்கு சம்மத்திக்கவும் தயாராகவே இருக்கிறாராம் மிஸ்டர் ‘ட்ரீட்மென்ட்’.