தமிழகம்

கடம்பூர் ஜமீன் வாரிசு ‘நகர்வுகள்’ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

குக்கர் கட்சியில் இருந்த கடம்பூர் ஜமீன் வாரிசு மீது இதற்கு முன்பு ஏகப்பட்ட பிராதுகளை அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ‘குக்கர் முதலாளி’யிடம் கூவிக் கூவி எச்சுப் போனார்கள். அதற்கெல்லாம் எந்தப் பலனும் இல்லாத நிலையில், பலபேர் ‘குக்கரை ஆஃப்’ செய்துவிட்டு மாற்றுக் கட்சிகளுக்கு குடிபெயர்ந்தார்கள்.

இந்த நிலையில், கடந்த 2021 தேர்தலில் ஜமீன்தாரை நம்பியே ‘பட்டி’ தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போனார் ‘குக்கர் முதலாளி’. இப்போது, குக்கர் கம்பெனி இலைக் கூட்டணியில் கொலாபிரேஷன் ஆனதை விரும்பாத ஜமீன்தார், தனது ஆதரவாளர்கள் சகிதம் ஆலயக் கட்சியில் ஐக்கியமாகிவிட்டார்.

          

இவரை இழுப்பதற்கு ஆலயக் கட்சியின் பெண் வாரிசு முன்னமே பேச்சுவார்த்தை நடத்தினாராம். கூட்டணி விஷயத்தில் குக்கர் தலைவர் விசிலை எப்படி அடிக்கிறார் என்று பார்த்துவிட்டு முடிவைச் சொல்வதாகச் சொல்லி இருந்தாராம் ஜமீன்.

இப்போது, ‘பட்டி’ தொகுதியில் தனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அந்தத் தொகுதியை உள்ளடக்கிய வடக்கு மாவட்டத்தின் செயலாளர் பதவியில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஆலயக் கட்சி பிரவேசம் செய்திருக்கிறாராம் கெட்டிக்கார ஜமீன்.

SCROLL FOR NEXT