யாரை நம்புவது, யாரை நம்பாமல் இருப்பது என்று தெரியாமல் விசில் பார்ட்டி ‘மாண்புமிகு’ மக்கள் அனைவரும் அல்லாடிக் கொண்டிருக்கிறார்களாம். அதற்குக் காரணம், அவர்களின் ‘நகர்வுகளை’ கவனிக்க சீக்ரெட் குழுக்கள் போடப்பட்டிருப்பதாக பரவும் செய்திதானாம். ‘மாண்புமிகு’க்களை விட அவர்கள் தம் உதவியாளர்களை உளவு பார்க்கவே அதி முக்கியத்துவம் அளிக்கச் சொல்லி இருக்கிறாராம் முதன்மையானவர்.
அப்படி இருந்தும் சிலர் அங்கும் இங்குமாய் ஊடாடிக் கொண்டிருக்கிறார்களாம். இது தெரியாமல் அண்மையில் ‘ஃபோர்ட்’ தலைவரை சந்தித்த அவரது சமூகத்தைச் சேர்ந்த தொழில்துறையினர் சிலர் முக்கியமான ஒரு டீல் குறித்துப் பேச வாயெடுத்தார்களாம்.
பதறிப் போய் அவர்களின் வாயை அடைத்த ‘ஃபோர்ட்’ தலைவர், “இதப் பத்தி எல்லாம் இங்க பேச வேண்டாம். எல்லாரையும் கண்காணிக்கிறாங்க. என்னையும் கவனிக்க ஆள் போட்டிருக்காங்க. நான் என்ன செய்யணும் செய்யக் கூடாதுன்னும் அவங்கதான் தீர்மானிக்கிறாங்க.
இதுக்கு முந்தி இத்தனை கட்டுப்பாடுகள நான் சந்திக்கல. கரணம் தப்பினா மரணம் தான் போங்க. இதுல லேசா நான் ஸ்லிப் ஆனாலும் உடனே தூக்குறதுக்கு ரெடியா இருக்காங்க. அதனால, இப்போதைக்கு எதுவும் வேண்டாம் கிளம்புங்க. பிறகு பார்க்கலாம்” என்று அவர்களை அவசரப்படுத்தி அனுப்பிவிட்ட பிறகே ஆசுவாசமானாராம்.