கடல் மாவட்ட ‘கார்டன்’ துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக அசைக்க முடியாத இடத்தில் இருந்தார் அந்த ‘ஐஸ்க்ரீம்’ நிறுவனத்தின் பெயர் கொண்ட ‘உதவி’ அதிகாரி. சூரியக் கட்சி ஆட்சியில் மந்திரியாக இருந்தவரின் ‘அருட்பார்வையே’ அதற்குக் காரணம் என்று அப்போது பேச்சு உண்டு.
இந்த அதிகாரி தனக்கு ‘விசுவாசமான’ பெண் அதிகாரி ஒருவரையும் அந்த மாவட்டத்தின் இன்னொரு அலுவலகத்தில் அதிகாரம் செலுத்த வைத்திருந்தார்.
இந்த நிலையில் இந்த இருவரையும் வீழ்த்த சமயம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள், ஆட்சி மாறியதும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்ல வேண்டிய விதத்தில் அனைத்தையும் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள்.
இதையடுத்து அண்மையில் ‘ஐஸ்க்ரீம்’ அதிகாரியை அல்வா சிட்டிக்கு தூக்கியடித்த அரசு, அவருக்கு ‘விசுவாசமான’ அம்மணியையும் முத்துநகருக்கு மாற்றி இருக்கிறது.
இந்தத் தகவல் அறிந்ததும் கடல் மாவட்ட கதர்பார்ட்டியின் விளைச்சல் அணியின் ஜெயமான குருவானவர் சேனல் செய்தியாளர் ஒருவர் சகிதம் பெண் அதிகாரியை பிரத்யேகமாகச் சந்தித்து, “உங்களப் பத்தின ‘மேலதிக’ விஷயங்கள் எங்கக்கிட்ட ஆதாரத்தோட இருக்கு.
அதையெல்லாம் பப்ளிக்ல விடாம இருக்கணும்னா ‘25 எல்’ பார்ட்டி ஃபன்ட் குடுக்கணும்” என்று டீல் பேசினார்களாம். அரண்டுபோன அம்மணி, “அவ்வளவெல்லாம் என்னால முடியாது” என்று சொல்லி இறுதியாக ‘3 எல்’லை எண்ணிக் கொடுத்தாராம். இப்போது இந்த விவகாரத்தை ‘பேக்கரி டீல்’ கணக்காய் பிரமாதப்படுத்திப் பேசிக் கொண்டிருக்கிறது கடல் மாவட்ட கதர்கட்சி வட்டாரம்.