தமிழகம்

மனம் மாறிய மான்செஸ்டர் மாவட்ட ‘மேடான’ தொகுதி எம்எல்ஏ | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மான்செஸ்டர் மாவட்டத்தின் ‘மேடான’ தொகுதியின் ஆளும் கட்சி ‘மகிழ்ச்சியான’ எம்எல்ஏ அவர். வெற்றிபெற்றதும் மரியாதை நிமித்தம் தன்னை சந்திக்க வந்த கல்குவாரி அதிபர்கள், கிரஷர் ஆலை அதிபர்கள் மற்றும் பிற தொழில் துறையினரிடம், “இதுக்கு முன்னாடி எப்படி இருந்தீங்களோ தெரியாது. ஆனா, நான் எதுக்காகவும் உங்ககிட்ட வரமாட்டேன். நீங்களும் ஆட்சிக்கு கெட்ட பேரு ஏற்படுத்தாம நடந்துக்குங்க” என்று ‘நியாயமாகப்’ பேசினாராம்.

இந்த நிலையில், அண்மையில் முதன்மையானவரின் பிறந்த நாளை முன்னிட்டு மக்களுக்கு நல உதவிகளை வழங்கி பிரமாதப்படுத்தும்படி தலைமையிலிருந்து உத்தரவு வந்ததாம். தொகுதி நிர்வாகிகள் அதற்காக ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொண்டு ‘மகிழ்ச்சி’ எம்எல்ஏ-விடம் வந்தார்களாம்.

அவர்கள் கொண்டுவந்த பட்ஜெட்டைப் பார்த்துவிட்டு மிரண்டு போன திருவாளர் ‘மகிழ்ச்சி’, “யப்பாடி... அஞ்சு வருசத்துக்கும் என்னால இப்படி கைக்காசை செலவழிச்சு எல்லாம் சமாளிக்க முடியாது சாமி. ஏதோ என்னால முடிஞ்சத தந்துடுறேன். எக்ஸ்ட்ரா செலவுக்கு என் பேரைக் கெடுத்து எடுத்து மூடிடாத அளவுக்கு ‘லோக்கலா’ நீங்களே ஏதாச்சும் பண்ணிக்குங்க” என்று சிக்னல் கொடுத்தாராம்.

இதையடுத்து, குவாரி மற்றும் கிரஷர் அதிபர்களிடமும் பிற தொழில்துறையினரிடமும் ‘கம்பெனி’ கஷ்டத்தை எடுத்துச் சொல்லி ‘கலெக்‌ஷன்’ நடத்திய கழக கண்மணிகள், அதை வைத்து அன்னதானம், கல்வி உபகரணங்கள் வழங்குதல், மருத்துவ முகாம், தலைக்கவசம் வழங்குதல் என ஃபங்ஷனை சிறக்க வைத்தார்களாம்.

SCROLL FOR NEXT