கோவை: தமிழகத்தையே உலுக்கிய கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில், கோவை நீதிமன்றத்தில் 819 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று போலீஸார் தாக்கல் செய்தனர்.
கோவையில் 10 வயது சிறுமி கடந்த 21-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், கார்த்தி, அவரது நண்பர் மோகன் ஆகியோரை சூலூர் போலீஸார் கைது செய்தனர். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரையும் வரும் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பகவதியம்மாள் உத்தரவிட்டார்.
இதையடுத்து, இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சக கைதிகள் தாக்கியதால் காயமடைந்த கார்த்தி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீஸார் நேற்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இ-பைலிங் முறையிலும் நீதிமன்றத்திலும் நேற்று முறைப்படி ஒப்படைத்து தாக்கல் செய்தனர். இதில் அரசு தரப்பு சாட்சியங்கள் 114 பேர் பெயர்கள் மற்றும் 215 ஆவணங்கள் இடம்பெற்றுள்ளன. சம்பவம் நடந்த 21 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பதால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.