சென்னை: பெண்களை இழிவுபடுத்தி பேசிய பொன்ராஜ் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “நடிகர் விஜய் கட்சியை இழிவுபடுத்துவதாக நினைத்து கொண்டு, அந்த கட்சியில் உள்ள பெண்களை விலைமாதர்கள் என்ற பொருள்படும் வகையில் விமர்சனம் செய்திருக்கிறார் பொன்ராஜ் என்பவர். இந்த அளவுக்கு தரம் தாழ்ந்து விமர்சித்த பிறகும்கூட, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழக பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய பொன்ராஜ் உள்ளிட்ட அனைவர் மீதும் காவல் துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “பெண்களுடைய கண்ணியத்துக்கு எதிராகவும், அவர்களை அவமதிக்கக்கூடிய விதத்திலும், பிற்போக்கு ஆணாதிக்க கருத்துகளை முன்வைப்பது, குறிப்பாக பொதுவெளியை, இணையத்தை அதற்காக பயன்படுத்துவது அதிகரித்து வருவது வன்மையாகக் கண்டிக்கிறது.
கொள்கையின் அடிப்படையில் விமர்சிக்கும் தகுதியின்மையும், இயலாமையும், போதாமையுமே இதில் வெளிப்படுகிறது. பேசுவதையெல்லாம் பேசிவிட்டு மன்னிப்பு கேட்டால் முடிந்து விடக்கூடிய விஷயமல்ல இது. பெண்கள் குறித்த கண்ணியமற்ற இழிவுபடுத்தும் கருத்துகளை வெளிப்படுத்துவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.