தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக அங்கம் வகித்து வரும் நிலையில், கட்சியின் தலைவர் அன்புமணி, கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று முதல் இரண்டு நாட்களுக்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். அதன்படி இன்று (ஏப்.10) தனது பரப்புரையை, கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட மணலூர்பேட்டையில் தொடங்கும் அவர், அதைத் தொடர்ந்து பகண்டை கூட்டுசாலை பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
பின்னர் திருக்கோவிலூர் மற்றும் விழுப்புரம் நகரப் பகுதிகளில் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்கும் அவர், இறுதியாக பிரச்சாரத்தை விக்கிரவாண்டியில் நிறைவு செய்கிறார். இதையடுத்து நாளை (ஏப்.11) செஞ்சி தொகுதியில் தனது பயணத்தைத் தொடர்கிறார். அங்குள்ள மேல்மலையனூர் மற்றும் செஞ்சி ஆகிய முக்கிய இடங்களில் பரப்புரை மேற்கொண்ட பிறகு, மயிலம் தொகுதிக்கு உட்பட்ட நாட்டார்மங்கலம் பகுதியில் மக்களைச் சந்தித்துப் பேசுகிறார்.
இறுதியாக, விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அன்னியூர் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றி தனது இரண்டு நாள் பயணத்தை நிறைவு செய்கிறார். அன்புமணியின் வருகையை முன்னிட்டு விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் உற்சாகமான வரவேற்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.