சென்னை: மனதின் குரல் நிகழ்ச்சியில் தமிழகம் குறித்து பிரதமர் மோடி பல்வேறு இடங்களில் பெருமையுடன் குறிப்பிட்டார் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மாதந்தோறும் ’மனதின் குரல்’ என்னும் நிகழ்ச்சியின் வாயிலாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுமக்களிடம் உரையாடி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் 133-ஆம் அத்தியாயமான இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில், தன்னிலையான அணுக்கருப்பிளவு சங்கிலி தொடர் வினையை நமது தமிழகத்தின் கல்பாக்கம் அணு மின்நிலையம் வெற்றிகரமாக எட்டிவிட்டதை மகிழ்வுடன் பகிர்ந்து கொண்டார். அதேபோல, காற்றின் வாயிலாக மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகம் முக்கியப் பங்காற்றி வருவதையும் பெருமையுடன் குறிப்பிட்டார்.
ஃப்ரான்ஸில் நடைபெற்ற கணித ஒலிம்பியாட் தேர்வில் உலகளவில் ஆறாவது இடத்தைப் பிடித்து சாதித்த நமது பாரத தேசக் குழந்தைகளைக் குறிப்பிடும் போது, வெண்கலப் பதக்கம் வென்ற சென்னையைச் சேர்ந்த மாணவி செல்வி. ஷிவானி பரத் குமாரை பாராட்டியது மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, புத்தபெருமான் போதித்த நெறிகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டுமெனவும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2026 மக்கள்தொகை கணக்கெடுப்பில் பாரத மக்கள் பெருவாரியாகப் பங்குபெறவும் அன்புடன் வலியுறுத்தினார்’ எனத் தெரிவித்துள்ளார்.