பியூஷ் கோயல் | கோப்புப் படம்
தமிழகத்தின் ஆன்மாவை ஸ்டாலின் குடும்பம் சிதைத்து விட்டது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பது இந்தத் தேர்தல் களத்தில் ஆணித்தரமாக உறுதியாகிவிட்டது. திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், மக்கள் நலனுக்காகப் பாடுபடும் கட்சிகள் அல்ல.
அவை ஸ்டாலின் குடும்பத்தாலும், காந்தி குடும்பத்தாலும் நடத்தப்படும் ‘பிரைவேட் லிமிடெட்’ நிறுவனங்கள். இத்தகைய வாரிசு அரசியல் கலாச்சாரத்தை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். தமிழகத்தின் இன்றைய பின்னடைவுக்கு இந்த இரண்டு குடும்பங்களே முழு முதற்காரணம்.
திமுக அரசு ஊழலில் திளைக்கிறது. வளர்ச்சிப் பணிகளுக்காகக் கருவூலத்தில் ஒரு பைசாவைக் கூட இவர்கள் மிச்சம் வைக்கவில்லை. ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் மற்றும் கனிமொழி என இந்தக் குடும்பத்தினர் தமிழகத்தின் ஆன்மாவையே சிதைத்துவிட்டனர். சனாதன தர்மத்தை டெங்கு போன்றது என விமர்சிப்பதன் மூலம், உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் தொன்மையான பண்பாட்டையும் ஆன்மீகச் சிந்தனையையும் நேரடியாகத் தாக்குகிறார். தேர்தலுக்காகக் கோயில்களுக்குச் செல்வதால் மட்டும் உங்கள் பாவங்களைக் கழுவிவிட முடியாது.
மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமரை, ‘பயங்கரவாதி’ என்று அழைக்கும் அளவுக்கு திமுகவும் காங்கிரஸும் தரம் தாழ்ந்துவிட்டன. மல்லிகார்ஜுன கார்கேயின் இந்த வன்மமான பேச்சை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உதயநிதி ஸ்டாலினை அடுத்த முதல்வராக்க ஸ்டாலின் துடிக்கிறார். தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராகப் பேசுபவரைத் துணை முதல்வராக்கியுள்ளனர். தமிழக மக்களே, உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாதுகாக்க வேண்டிய நேரம் இது. வாரிசு அரசியலை வீழ்த்துவோம், வளர்ச்சியைத் தேர்ந்தெடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.