காரைக்குடி: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் விசாரிக்கிறார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பரமணியபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் எம்.பி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை அலுவலகத்தை திறக்க வந்த போது, நுழைவு வாயிலில் 2 இடங்களில் பாட்டில்கள் சிதறிக் கிடந்தன. மேலும் பெட்ரோல் எரிந்த அடையாளமும் இருந்தது. தகவலறிந்து வந்த மாங்குடி எம்எல்ஏ அப்பகுதியை பார்வையிட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் மற்றும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய போலீஸார் தடயங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர். மேலும், விசாரணையில் 2 பாட்டில்களில் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தெரிய வந்தது. அலுவலகத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் பெட்ரோல் குண்டு வீசியவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
மேலும், சமீபத்தில் செய்தியாளர்களிடம் கார்த்தி சிதம்பரம் கூறும்போது, ஈரானில் உயிரிழந்த உச்சபட்சத் தலைவர் காமேனி கொடூரமான தலைவர் என தெரிவித்திருந்தார். இதற்கு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக கண்டன சுவரொட்டிகள் ஒட்டினர். மேலும் சிலர் சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் உருவப்படத்தை எரித்தனர். இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடைபெற்றதால், போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.