சென்னை: உறுதியளிக்கப்பட்ட ஒய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு 8 வார காலத்துக்குள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவி்க்கப்பட்ட இந்த திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுக்கக் கோரி தமிழ்நாடு பழைய ஓய்வூதிய திட்ட மீட்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான நந்தகோபால் உள்ளிட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அதில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டப்படி பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு பணியில் சேர்ந்து 2026-ம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற தகுதியுடைவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உறுதியளி்க்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த இதுவரை எந்தவொரு விதிகளும் வகுக்கப்படவில்லை. இதனால் 2026-க்கு முன்பாக ஓய்வு பெற்றவர்கள் கருணை அடிப்படையிலான ஓய்வூதிய பலன்களை பெற முடியாது.
எனவே, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஏற்கெனவே அறிவித்தபடி 2026 ஜனவரி முதல் அமல்படுத்த தேவையான விதிகள் மற்றும் நெறிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, இதுதொடர்பாக தமிழக அரசு 8 வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.