இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
அருப்புக்கோட்டை: சட்டப்பேரவையில் தனிப்பட்ட முறையிலான தாக்குதலில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவையில் தனிப்பட்ட முறையிலான தாக்குதலில் ஈடுபடுவது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல.
சட்டப்பேரவையில் யாரையும் தாழ்த்திப் பேசக்கூடாது. உடல் மொழியால் விமர்சிக்கக் கூடாது. பண்பு தவறிய வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. உயர் பொறுப்பில் இருப்பவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தந்தையைத் தேடுகிறேன் என முதல்வர் கூறியது ஏற்புடையது அல்ல. அதேபோல், அதற்கு எதிர்க்கட்சித் தலைவர் முதல்வரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசியதும் ஏற்புடையது அல்ல.
மக்கள் பிரச்சினைகள் ஏராளமாக இருக்கின்றன. அதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்பதுதான் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு. மத்திய அரசுடன் மோதல் போக்கு இல்லையென்று சொன்னாலும் தவெக அரசு மாநில உரிமைகளுக்காகப் போராட வேண்டும். இவ்வாறு கூறினார்.