சென்னை: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்கப்பட்ட சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது என்று, தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன், தலைவர் செ.ப.முத்தமிழ்மணி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி, அதிக இடங்களில் வெற்றிபெற்ற தவெக தலைவர் விஜய் முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
அவருக்கும், அவரது கட்சியை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வாழ்த்தினையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.
முதல்வர் விஜய் ஆட்சி அமைப்பதற்கு உதவும் வகையில், திமுக கூட்டணியில் அங்கம் வகித்த சில கட்சிகள் அவருக்கு ஆதரவு தருவதற்கு ஒப்புதல் கொடுத்த, திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டுகிறோம்.
இவ்வாறு செய்ததின் மூலம் தமிழகத்தில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை என்று கூறி, ஆளுநர் ஆட்சி என்ற பெயரில் பாஜக ஆட்சி அமைக்க வகுக்கப்பட்ட சதி திட்டத்தை ஸ்டாலின் முறியடித்திருக்கிறார்.
தமிழகத்தில் ஜனநாயகம் தழைப்பதற்கு உதவிய அவருடைய பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள் என்பதில் ஐயமில்லை.
கடந்த திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்துமாறும், தனது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறும் புதிய முதல்வர் விஜய்யை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.