கோப்புப் படம்
சென்னை: அரசுப் பேருந்துகளில் செல்போன்களில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, வீடியோ பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர்களுக்கு போக்குவரத்து துறை செயலர் நிர்மல்ராஜ் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணிகள் சுகமாக பயணம் செய்யவும், சக பயணிகளுக்கு எந்தவித இடையூறும் இன்றி நடந்து கொள்ள ஏதுவாகவும், பயண நெறிமுறைகளை பயணிகள் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் போது, மோட்டார் வாகன (ஓட்டுதல்) ஒழுங்குமுறை 2017-ன் விதி 5(10)-ன் படி, வாகனத்தில் உரத்த ஒலியில் இசை ஒலிக்கப்படாமல் இருப்பதை ஓட்டுநர் உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் 1989 விதி 228-ன்படி, சக பயணிகளுக்கு இடையூறு அல்லது சிரமத்தை ஏற்படுத்தும் எந்தவொரு செயலும் முறைகேடாக கருதப்படும்.
புளூடூத், ஹெட்போன்
இதில் பயணம் முழுவதும் கைபேசியில் உரத்த குரலில் பேசிக்கொண்டே தொடர்ந்து பயணித்தல் மற்றும் கைபேசியில் ஸ்பீக்கர் பயன்படுத்துதல், இயர்
போன் அல்லது ஹெட்போன் இல்லாமல் இசை கேட்பது மற்றும் காணொலிகள், படம் பார்த்தல் ஆகியவை தவிர்க்கப்பட வேண்டும்.
புளூடூத் அல்லது ஹெட்போன் பயன்படுத்தி சக பயணிகளுக்கு இடையூறு இல்லாமலும், பயணிகளின் கைபேசி உபயோகம் மற்றவர்களின் அமைதி நிலையை கெடுக்காமலும் இருக்க வேண்டும். மேற்காணும் கட்டுப்பாடுகளை அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும், பயணம் செய்யும் பயணிகளுக்கு தெரியப்படுத்தி உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும், அனைத்து பேருந்துகளிலும் உட்புறத்தில் பயணிகளுக்குத் தெளிவாகத் தெரியும்படி விழிப்புணர்வு ஒட்டுவில்லைகள் (Stickers) ஒட்டப்பட வேண்டும். அதனை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.