கோப்புப் படம்
தேசிய ஜனநாயக கூட்டணியில், ஐஜேகே சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்த கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் “மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆட்சியை வழங்குவதே எங்களின் இலக்கு” என்று தெரிவித்தார்.
இந்திய ஜனநாயகக் கட்சிக்கு (ஐஜேகே) பல்லாவரம், குன்னம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர்களை, கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் மற்றும் தலைவர் ரவி பச்சமுத்து ஆகியோர் நேற்று அறிவித்தனர். பல்லாவரம் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் வெங்கடேசனும், குன்னம் தொகுதி வேட்பாளராக சரண்யா அன்பழகனும் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரிவேந்தர், “தமிழகத்தில் ஊழல், லஞ்சம், விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு குறைபாடு போன்ற பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் ஆட்சியை வழங்குவதே எங்களின் இலக்கு. பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சம உரிமை வழங்குவது எங்களது கட்சியின் முக்கியக் கொள்கை.
அதனடிப்படையில் குன்னம் தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளோம். தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், கட்சி சின்னத்தை மக்களிடம் கொண்டு செல்ல சிரமம் ஏற்படும். அதனால் கூட்டணிக் கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறோம்” என்றார்.