தமிழகம்

இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்: நிர்வாகிகளுக்கு பழனிசாமி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘இடைத்தேர்தலில் துரோகிகளுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’ என்று அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

அதிமுகவின் வளர்ச்சிப் பணிகள் குறித்து செங்கல்பட்டு, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவல கத்தில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பழனிசாமி பேசும்போது, ‘‘அதிமுகவால் அரசியல் வெளிச்சம் பெற்றவர்கள், நன்றி இல்லாமல் கட்சிக்கு துரோகம் செய்து வெளியேறி வருகின்றனர். அதன்மூலம் புதியவர்கள் கட்சிக்குள் வந்து கொண்டிருக்கின்றனர்.

இதனால் கட்சி புத்தெழுச்சி பெற்று வருகிறது. அந்தத் துரோகிகள் இடைத்தேர்தலில் போட்டியிடு வார்கள். அவர்கள் ஒருவர்கூட வெற்றி பெறக்கூடாது. அவர்களுக்கு தக்க பாடம் புகட்ட, தேர்தல் பணிகளை இப்போதே தொடங்குங்கள்’’ என்றார்.

இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் தனபால் எம்.பி கூறும்போது, ‘கட்சி உத்தரவை மீறி, ஒரு கட்சிக்கு ஆதரவளித்து, ஆட்சியமைக்க வைத்தவர்களின் மாவட்டச் செயலாளர் பதவியை பழனிசாமி பறித்தார்.

புதியவர்களுக்கு வாய்ப்பளித்து, மாவட்டச் செயலாளர்களாக நியமித்தார். அவர்களிடமிருந்து எப்படி பதவியை பறிக்க முடியும். மீண்டும் தங்களுக்கு பதவி கிடைக்காததால், சிலர் கட்சியை விட்டு வெளியேறியுள்ளனர்’ என்றார்.

புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பழனிவேல் தலைமையில் அதிமுகவினர் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் பழனிசாமியைச் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பழனிவேல் கூறியதாவது: போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என கூறிய முதல்வர் விஜய், குட்கா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சி.விஜய பாஸ்கரை கட்சியில் சேர்த்திருக்கிறார்.

விராலிமலை தொகுதியில் எந்த பின்னடைவும் கிடையாது, இடைத்தேர்தலில் அதிமுக 100 சதவீதம் வெற்றி பெறும். முன்னாள் மாவட்டச்செயலாளர் கருப்பையா இருக்கும்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம். விஜயபாஸ்கர் வந்த பின்பு அவர் மட்டும்தான் வெற்றி பெற்றார் என்று கூறினார்.

SCROLL FOR NEXT