சென்னை: நெல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி தளர்வை பெறத் தவறியது, முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளுக்கு செய்த துரோகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நெல் பயிரிடப்படும் பரப்பு, விளைச்சலுக்கு ஏற்ப நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து, தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, சாக்கு மற்றும் சுமை தூக்கும் பணியாளர்கள், லாரி போக்குவரத்து, சேமிப்புக் கிடங்குகள் போன்ற வசதிகளை செய்து கொடுத்து, உரிய நேரத்தில் கொள்முதல் செய்ய வேண்டியது அரசின் கடமை.
ஆனால், ஒவ்வோர் ஆண்டும் திமுக அரசு இவற்றை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தத் தவறிவிட்டது. நடப்பாண்டு குறுவை சாகுபடியில் இவற்றை செய்யாததால், டெல்டா விவசாயிகள் வியர்வை சிந்தி விளைவித்த நெல்லை கொள்முதல் செய்ய தாமதமாகிவிட்டது.
இதனால் மழையில் நெல் மூட்டைகள் நனைந்து விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. குறுவை சாகுபடியின் போது மழை பெய்யும் என்பதால் ஈரப்பதம் 22 சதவீதம் வரை இருக்கும்.
எனவே, நெல் ஈரப்பத தளர்வு முயற்சியை உரிய நேரத்தில் மேற்கொள்ளாமல், மத்திய அரசு அனுமதி மறுத்ததாக திசை திருப்புவது ஏன்? தன் சொந்தப் பிரச்சினைகளுக்காக டெல்லி செல்லும் முதல்வர், விவசாயிகளின் பிரச்சினைக்காக டெல்லி செல்லாதது ஏன்? போராட்டம் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றி அரசியல் செய்வது ஏன்? 39 எம்.பி.க்களை வைத்திருந்த போதிலும், மத்திய அரசை வலியுறுத்தி தளர்வை பெறத் தவறியது, விவசாயிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் செய்த துரோகமாகும். இதற்காக திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பழனிசாமி தெரிவித்துள்ளார்.