பழநி: கடந்த மூன்றரை ஆண்டுகளில் 467 ஆக்கிரமிப்பாளர்களிடம் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ரூ.1,316 கோடி சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பழநி தேவஸ்தானத்துக்கு சொந்தமான நிலங்களையும், கட்டிடங்களையும் பல ஆண்டுகளாக தனியார் பலர் ஆக்கிரமித்து இருந்தனர்.
இந்தச் சொத்துகளை மீட்கும் முயற்சியில் தேவஸ்தானம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 2.4 கி.மீ. தூரமுள்ள கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கரிமப்பு கடைகள், குடியிருப்புகள், கட்டிடங்கள் அகற்றப்பட்டு ரூ.156 கோடி மதிப்பிலான 329 சொத்துகள் மீட்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல், தேனி, கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருக்கும் சொத்துகளை மீட்டு வருகின்றனர். அந்த வகையில் 2022 மே 9 முதல் புதன்கிழமை (டிச.3) வரை கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆக்கிரமிப்பில் இருந்த 137.95 ஏக்கர் நிலங்கள், 8.52 லட்சம் சதுர அடி மனைகள் மற்றும் 86 ஆயிரத்து 943 சதுர அடி கட்டிங்கள் மொத்தம் 467 ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதன் சொத்து மதிப்பு ரூ.1,316 கோடி என பழநி கோயில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்துள்ளார்.