பா.ரஞ்சித்

 
தமிழகம்

“ஆட்சிப் பொறுப்பேற்று 2 வாரங்களே ஆகி இருந்தாலும்...” - கோவை சிறுமி படுகொலைக்கு பா.ரஞ்சித் கண்டனம்

டெக்ஸ்டர்

சென்னை: கோவையில் பத்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கோவை பகுதிக்குட்பட்ட சூலூரில் 10 வயது சிறுமி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் உலுக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட குடும்பத்தை எந்த வகையிலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரம் இது.

சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்; உரிய தண்டனை பெற்றுத் தரப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசின் இந்த அறிவிப்போடு இக்கொடூரத்தை கடந்து போக முடியாது.

கடந்த தேர்தலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் முக்கிய பேசுபொருளானது. அவை ஆட்சி மாற்றத்தில் சரி செய்யப்படும் என்கிற உத்தரவாதமும் கொடுக்கப்பட்டது. 

ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகி இருந்தாலும், இத்தகைய குற்றங்களுக்கு முன்னே அதை ஒரு காரணமாக இனி ஒருபோதும் முன்வைக்க முடியாது. குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டும். சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் இதை எல்லா விதங்களிலும் அணுகி, அதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

இந்த மனிதாபிமானமற்ற கொடூரத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் துயரத்தில் நாங்களும் பங்கெடுக்கிறோம்” இவ்வாறு பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT