பெ.சண்முகம்
சென்னை: முதல்வர் விஜய்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தலைமைச் செயலர் தலைமையில் நடைபெற்ற உயர் அதிகாரிகள் கூட்டத்தில், இடதுசாரி இயக்கங்கள், கரப்பான் பூச்சி அமைப்பினரின் போராட்டங்களில் மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க பள்ளிக்கல்வி, உயர்கல்வி, காவல்துறை உள்ளிட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது. இது திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளைக் குறிவைக்கும் செயலாகும்.
அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், அப்பகுதி கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், அவர் மீது 17-ஏ பிரிவின் கீழ் விளக்கம் மட்டும் கேட்டு அரசு மென்மையாக அணுகுவது அவரைப் பாதுகாக்கும் செயலாகவே தெரிகிறது. இவ்விவகாரங்களில் முதல்வர் தலையிட்டு, தலைமைச்செயலர் மற்றும் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.