ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 140 ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்க வளாகத்தை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஊட்டி பூங்கா சாலையில் அமைந்துள்ள அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்க வளாகத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அறங்காவலர்கள் முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு தெரிவிக்கப்படும் காரணங்கள் பாரம்பரிய சின்னங்களை பாதுகாக்க விரும்புபவர்களை கவலையடையச் செய்துள்ளது. பல ஆண்டுகளாக இந்த பாரம்பரியக் கட்டிடத்தை பாதுகாத்து வந்த மக்களும், சமூக அமைப்புகளும் தற்போது அதனை காக்கும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். இதுதொடர்பாக நீலகிரி ஆவண காப்பக இயக்குநர் டி.வேணு கோபால் கூறும்போது, ‘‘அசெம்ப்ளி ரூம்ஸ் தற்போது 140 ஆண்டுகளை எட்டியுள்ளது.
அதன் நூற்றாண்டு விழா 1986-ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கட்டிடங்களையும் பாரம்பரிய சொத்துகளையும் பாதுகாக்கும் நோக்கில் இயற்றப்பட்ட தமிழ்நாடு பாரம்பரிய ஆணைய சட்டத்தின் கீழ், அதன் கட்டமைப்பு, பயன்பாடு அல்லது பராமரிப்பில் மேற்கொள்ளப்படும் எந்த மாற்றமும் சட்டரீதியான பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அசெம்ப்ளி ரூம்ஸின் பாரம்பரிய தன்மையை அரசு, நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாதுகாத்து வந்துள்ளனர். சுதந்திரத்துக்கு முன்பே இயங்கி வந்த ஒரு உணவகம் 1970-களில் காலி செய்யப்பட்டது. அங்கு செயல்பட்டு வந்த மற்றொரு உணவகமும் அண்மையில் மூடப்பட்டது. மேலும், இந்திய ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் அமைக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. கடந்த ஆண்டு காவல்துறை உதவி மையம் அமைக்கும் திட்டம் மக்கள் எதிர்ப்பால் நிறுத்தப்பட்டது.
இந்த சூழ்நிலையில், பாரம்பரிய நிறுவனத்தை முழுமையாக தனியார்மயப்படுத்தும் முயற்சி ஏற்றுக்கொள்ள முடியாது. அசெம்ப்ளி ரூம்ஸ் ஊட்டியின் நூற்றாண்டை நினைவுகூரும் விதமாக உருவாக்கப்பட்ட ஒரு பொது அறக்கட்டளை ஆகும். பொதுமக்கள் பொழுதுபோக்கு மற்றும் சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட இந்த அறக்கட்டளைக்காக ரூ.50,000 நிதி மக்கள் பங்களிப்பின் மூலம் திரட்டப்பட்டது. பொதுநல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு அறக்கட்டளையை தனியார் வணிக நிறுவனமாக மாற்றுவது ஏன்? மாற்றமடைந்த காலத்திற்கேற்ப அசெம்ப்ளி ரூம்ஸும் தனது சேவைகளை விரிவுபடுத்தி வந்துள்ளது.
1931-ம் ஆண்டு ஐரோப்பியர்களும் இந்தியர்களும் ரூ.30,000 நிதி அளித்ததன் மூலம் இது திரைப்பட அரங்கமாக மாற்றப்பட்டது. அதன் பின்னர் தரமான திரைப்படங்களை குறைந்த கட்டணத்தில் திரையிடுவதன் மூலம் பொழுதுபோக்குடன் ஆங்கில அறிவு மற்றும் சமூக விழிப்புணர்வையும் உள்ளூர் மக்களிடம் பரப்பி வந்துள்ளது. கடந்த 140 ஆண்டுகளாக அசெம்ப்ளி ரூம்ஸ் தன்னிறைவு அடிப்படையில் செயல்பட்டு வந்துள்ளது. பல காலகட்டங்களில் அறக்கட்டளையின் நோக்கங்களுக்குள் உபரி வருவாயை எவ்வாறு பயன்படுத்துவது என்பதே முக்கிய விவாதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
சமீப ஆண்டுகளில் வாகன நிறுத்துமிட வசதியின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டியதுடன், சுற்றுலா வாகன நெரிசலை சமாளிப்பதிலும் அது முக்கிய பங்காற்றி வந்துள்ளது. அசெம்ப்ளி ரூம்ஸின் வருவாயை அதிகரிக்க, அதன் அடிப்படை நோக்கங்களை பாதிக்காமல் பல்வேறு புதுமையான வழிகள் இன்னும் உள்ளன. புதிய நிர்வாகத்தை கொண்டு வருவதற்குப் பதிலாக திறமையான மேலாண்மையும் தகுதியான அறங்காவலர்களும் தேவை’’ என்றார்.