பிரச்சாரத்தில் குஷ்பு
மதுரை: ‘‘இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக உள்ள நான் சொல்கிறேன். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இருக்காது,’’ என்று திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் விவி.ராஜன் செல்லப்பாவை ஆதரித்து பேசிய தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் வி.வி.ராஜன் செல்லப்பாவை ஆதரித்து, குஷ்பு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி, மேல அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். பொதுமக்கள், அதிமுகவினர், அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவிற்கும், நடிகை குஷ்புவிற்கும் பூக்கள் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்,
குஷ்பு பிரச்சாரத்தில் பேசியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுரைக்கு எந்த வேலைவாய்ப்பு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைக் கொண்டு வராத திமுகவினர் எந்த முகத்தை வைத்து மக்களிடம் ஓட்டு கேட்டு வருகிறார்கள். எய்ம்ஸ், நீட் தேர்வு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம் தடுப்பு என கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. பெண் குழந்தைகள் நிம்மதியாக வெளியே போய்விட்டு வீட்டுக்கு திருப்பி வர முடிகிறதா? ஐந்து நிமிடங்கள் தாமதமானால் பெற்றோர்கள் மனதில் திக் திக் என்று அடிக்கிறது. நானும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன். அதனாலேயே இதைச் சொல்கிறேன்.
அந்த அளவுக்கு தமிழத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய் உள்ளது. உலகில் மிகச் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் மோடி என்கிறார்கள். கடைசி ஐந்தாவது இடத்தில் இருந்த இந்தியா உலக அரங்கில் முன்னனி பெற ஆரம்பித்துள்ளது.
மதுரையில் திமுகவினர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு பதவிகளை இழந்துள்ளனர். போலீஸாரால் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றால், நிம்மதி கிடைக்க வேண்டுமென்றால், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். பாதுகாப்பை வழங்கி மக்கள் நிம்மதியாக வாழ அதிமுக ஆட்சிக்கு மீண்டும் வர வேண்டும்.
பஸ்ஸில் பெண்கள் இலவச பயணத்தை பார்த்து திமுக அமைச்சர் ‘ஓசில தான் போறீங்க...’ என கிண்டல் செய்கிறார்.
இன்னொரு அமைச்சர் பெண்களை இழிவாகப் பேசுகிறார். பெண்கள் என்றால் அவ்வளவு இழிவாகப் போச்சா உங்களுக்கு. பெண்களைப் பார்க்க அவ்வளவு கேவலமாக உள்ளதா? பெண்கள் ஆசைப்பட்டது சம உரிமை. பெண்கள் ஆசைப்பட்டது சம மரியாதை. பழனிசாமி பெண்களுக்கு மட்டுமில்லை, ஆண்களுக்கும் இலவச பயணம் என்றுகூறிவிட்டார். அதனால், இனி வீட்டில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து பஸ்சில் இலவசமாக பயணம் செய்யலாம். அதிமுகவுக்கு வாக்களித்தால் நிச்சயமாக மக்கள் வாழ்க்கை தரம் உயரம்.
இவ்வாறு அவர் பேசினார்.