அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி

 
தமிழகம்

மாணவர்களுக்கு கல்விக் கடன் தள்ளுபடி: 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதியை அறிவித்தார் பழனிசாமி

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள்

மோகன் கணபதி

சென்னை: “மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும். வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்” என்பன உள்ளிட்ட 5 தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாட்டில் 17-ஆவது சட்டமன்றப் பேரவைக்கான பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தமிழக மக்களின் பேரன்பைப் பெற்று, மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அளிக்கப்படும் இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்குறுதிகள்:

முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000-மாக உயர்வு: சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவித் தொகை ரூ. 2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மேலும், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

          

வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி: மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.

வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்: வாழ்வாதார உதவியாக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டில் உயிரிழந்தால் நிவாரணம்: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.

அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே மீண்டும் பின்பற்றப்படும்.

சிறுபான்மையினருக்கான அறிவிப்புகள்:

1. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர் சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

2.மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, முதற்கட்டமாக 5 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக மேலும் 5 தேர்தல் வாக்குறுதிகளை அதிமுக வழங்கியுள்ளது.

முன்னதாக, இன்று காலைசென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் எந்த அளவில் நடைபெற்று வருகின்றன என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் கேட்டறிந்ததோடு, 2 கட்ட தேர்தல் வாக்குறுதிகளை, கிளை, வார்டு, வட்ட அளவில் பட்டிதொட்டியெங்கும் வாழும் மக்களிடையே கொண்டுசெல்வதோடு, பல்வேறு வகையிலான தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டு, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு விரிவாக ஆலோசனை வழங்கினார்.

SCROLL FOR NEXT