பிறக்கும்போது எந்த பதவியுடன் பிறந்தோம்? அதை இழப்பதற்கு... என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்
தேனியில் இருந்து சென்னை செல்ல நேற்று மாலை திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக கூட்டத்தை உள் அரங்கில் நடத்தியது குறித்து, அந்த கட்சித் தலைவர் விஜய்யிடம்தான் கேட்க வேண்டும். கூட்டத்தில் விஜய் வாக்குறுதிகள் கொடுத்துள்ளார். அவரது கனவு நிறைவேறட்டும்.
எஸ்ஐஆர் படிவம் பூர்த்தி செய்வதில் உள்ள சிரமங்களை எளிதாக்க வேண்டும். அதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். பிஹாரில் எஸ்ஐஆர்தான் வெற்றிக்கு காரணம் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அவர் உண்மைதான் பேசுவார். பத்திரிகையாளர்கள் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாவது தவிர்க்கப்பட வேண்டும். அவர்களுக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும்.
நாங்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவோமா என்றால், அரசியலில் எதுவும் நடக்கலாம். எங்கள் கொள்கையின்படி வாய்ப்பு தர வேண்டும். அண்ணாமலை, தினகரன் சந்திப்புக்கு வாழ்த்துகள். அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பு அதிகம். அதிமுக ஒன்றிணைந்தால்தான் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியும் என்பது மக்கள் கருத்து. எனது ஆதரவாளர்கள் விலகுவது என்னை எந்தவிதத்திலும் பாதிக்காது. நாம் பிறக்கும்போது எந்த பதவியோடு பிறந்தோம், அதை இழப்பதற்கு. இவ்வாறு அவர் கூறினார்.