மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி நாதக வேட்பாளர்கள்

 
தமிழகம்

இடைத்தேர்தல்: மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி நாதக வேட்பாளர்கள் அறிவிப்பு

அனலி

சென்னை: நாம் தமிழர் கட்சி சார்பில் மதுராந்தகம், தாராபுரம், தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் தனது எக்ஸ் பக்கத்தில், “மதுராந்தகத்தில் கோ.ஜானகிராமன், தாராபுரம் மு.கார்த்திகா , தட்டாஞ்சாவடி (புதுச்சேரி) ச.கார்த்திக் குமாரி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்கு கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் முழு ஒத்துழைப்பை நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், கடந்த 7-ம் தேதி மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்.6-ம் தேதி வாக்குப் பதிவும், 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செப்.9-ம் தேதி தொடங்கியது.

திமுக சார்பில் மதுராந்தகத்தில் ஐ.பரந்தாமன் மற்றும் தாராபுரத்தில் சுகன்யா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் ஏற்கெனவே போட்டியிட்டு வென்ற மரகதம் குமரவேல் மற்றும் சத்திய பாமா ஆகியோரையே தவெக வேட்பாளர்களாக அக்கட்சியின் தலைமை அறிவித்தது.

அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத், தாராபுரம் தொகுதியில் கே.பானுமதி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டி என இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளன.

இதனால் இந்த இடைத்தேர்தலில் ஐந்து முனைப்போட்டி உறுதியாகியுள்ளது.

SCROLL FOR NEXT