சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

 
தமிழகம்

“எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த 4 பேருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ்” - சபாநாயகர் தகவல்

வெற்றி மயிலோன்

சென்னை: “ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. அவர்களின் ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம்” என தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்​ய​பா​மா, பெருந்துறை ஜெயக்​கு​மார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்​பையா ஆகிய 4 எம்​எல்​ஏக்​கள், தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​தனர்.

தவெகவில் இணைந்த இந்த 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சபாநாயகரிடம் அதிமுக மனு அளித்துள்ளது. இந்தச் சூழலில், எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன் என்பது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு 4 பேருக்கும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சபாநாயர் ஜேசிடி பிரபாகர், “அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் வரும் ஜூன் 16, 17 தேதிகளில் கலைவாணர் அரங்கத்தில் புத்தாக்க பயிற்சி நடைபெறவுள்ளது.

முதல்வர் விஜய்யால் தொடங்கிவைக்கப்படும் இந்த நிகழ்வில், உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், விதிகள் குறித்து பேரவை செயலாளர் அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் பயிற்சியளிக்க உள்ளனர். இந்தப் பயிற்சியில் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்படுகிறது.

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. ராஜினாமா குறித்து விளக்கமளிக்க 7 நாட்கள் அவகாசம் அளித்து கடந்த 9-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அதிமுக கொறடா யார் என்பது குறித்த மனுக்கள் மீது ஆய்வு நடக்கிறது, சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பே இதுகுறித்து அறிவிக்கப்படும்.

சட்டப்பேரவை நடவடிக்கைகளை முழுமையாக நேரலை செய்ய பரிசீலனை செய்யப்படுகிறது. சட்டப்பேரவையில் அனைவரின் கருத்துக்கும் நான் மதிப்பளிப்பேன். ஆளுநர் உரையின் நகல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவரிடம் அளிக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT