பழநி: டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் க.விக்னேஷ் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம் பழநியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் பரவலாக மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. டாஸ்மாக் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு பரிசீலனையில் இருக்கிறது. டாஸ்மாக்கை தனியார்மயமாக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை.
டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் வெள்ளையாக வெளியே தெரிகிறது. பிறகு வெள்ளை அறிக்கை எதற்கு? ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காகத்தான் குற்றச்சாட்டு சொல்லி வருகிறோம். 717 கடைகள் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை மூடவும், இடம் மாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான, பட்டியல் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.