சென்னை: “அதிமுக அலுவலகம் மீது ஒரு தூசிகூட படாது. எங்களால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது,” என அதிமுக எம்எல்ஏ சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவி வரும் நிலையில், அரசியல் களம் பரபரப்புடன் காணப்படுகிறது. இந்நிலையில், சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “இந்த ரத்தம் அதிமுகவின் ரத்தம். எங்களுக்கு பல பதவிகளைக் கொடுத்து அழகு பார்த்த இயக்கம் அதிமுக.
சட்டப்படி அதிமுகவின் உண்மையான தொண்டன் என்பதை நிரூபித்ததன் பின்னரே என் கால் அதிமுக அலுவலகத்தில் பதியும். அதிமுக அலுவலகம் எங்கள் கோயில். அதிமுக அலுவலகம் மீது ஒரு தூசிகூட படவோ, பாதிப்பு ஏற்படவோ அனுமதிக்க மாட்டோம். யாரும் அச்சப்பட வேண்டாம்” எனப் பேசினார்.
இதனிடையே, அதிமுக பிளவுபட்டுள்ள நிலையில், தங்கள் தரப்பு கொறடாவை அங்கீகாரம் செய்ய வேண்டும் என சட்டப்பேரவைத் தலைவரை இபிஎஸ் தரப்பு மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு தனித்தனியாக நேரில் சென்று மனு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.