திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமத்தில் முருகன் கோயில் வேலில் படைக்கப்பட்ட எலுமிச்சம் பழம் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த ஒட்டனந்தல் கிராமம் இரட்டைக் குன்றின் மீது ரத்தினவேல் முருகன் கோயில் உள்ளது. கருவறையில் வேல் மட்டுமே இருக்கும். இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர திருவிழா உற்சவத்தில்வேலில் தினசரி படைக்கப்படும் 9 எலுமிச்சம் பழங்கள், இடும்பன் பூஜையில் வைத்து ஏலம் விடும்நிகழ்வு நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. முதல் நாள் எலுமிச்சம் பழம், ரூ.45 ஆயிரத்து 500-க்கு ஏலம் போனது.
இதேபோல் இதர 8 பழங்களும் ரூ.15 ஆயிரம், ரூ.16 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதன்மூலம் 9 எலுமிச்சம் பழங்களையும் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்துக்கு பக்தர்கள் ஏலம் எடுத்தனர்.
வேலில் சொருகப்பட்ட எலுமிச்சம் பழத்தை உட்கொண்டால், குழந்தை வரம், திருமணம் கைகூடுதல் மற்றும் குடும்ப பிரச்சினைகள் நீங்கும் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாகும்.
ஏலத்தில், விழுப்புரம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பங்கேற்றனர். எலுமிச்சம் பழத்தை ஏலம் எடுத்தவர்கள், தங்கள் உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சம் பழத்தை பெற்றுக் கொண்டனர். இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டு குழம்பு சாதம் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.