செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் இருந்த மது பாட்டில், அசைவ உணவு, நொறுக்குத் தீனிகள்.

 
தமிழகம்

செம்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பிரசவ வார்டில் மது விருந்துடன் புத்தாண்டு கொண்டாட்டம்

சிவகங்கை மாவட்ட சுகாதார அலுவலர் விசாரணை

செய்திப்பிரிவு

காரைக்குடி: செம்பனூர் அரசு ஆரம்ப சுகா​தார நிலைய பிரசவ வார்​டில் மது விருந்​துடன் புத்​தாண்டு கொண்​டாட்​டம் நடந்​த​தாக எழுந்த புகார் தொடர்​பாக, சிவகங்கை மாவட்ட சுகா​தார அலு​வலர் விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

சிவகங்கை மாவட்​டம் கல்​லல் அரு​கே​யுள்ள செம்பனூர் அரசு ஆரம்ப சுகா​தார நிலை​யம் 24 மணி நேர​மும் செயல்​பட்டு வரு​கிறது. இங்கு கல்​லல் மற்​றும் சுற்று வட்​டாரத்​தில் உள்ள 50-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களைச் சேர்ந்த பொது​மக்​கள் சிகிச்சை பெற்​றுச் செல்​கின்​றனர். வட்​டார மருத்​துவ அலு​வலர் உட்பட 4 மருத்​து​வர்​கள் மற்​றும் பணி​யாளர்​கள் பணிபுரி​கின்​றனர்.

இந்​நிலை​யில், கடந்த 31-ம் தேதி நள்​ளிர​வில் கல்​லலைச் சேர்ந்த தயாளன் (19) விபத்​தில் காயமடைந்​தார். அதே பகு​தி​யைச் சேர்ந்த அவரது நண்​பர் அரசு, தயாளனை மீட்டு சிகிச்​சைக்​காக செம்பனூர் ஆரம்ப சுகா​தார நிலை​யத்​துக்கு கொண்டு சென்​றார்.

அங்கு மருத்​து​வர்​கள், பணி​யாளர்​கள் இல்​லாத நிலை​யில், அரசு அவர்​களைத் தேடி அவசர சிகிச்சை மற்​றும் பிரசவ வார்​டுக்கு சென்​றார். அப்​போது மருத்​து​வர் ஓய்​வறை​யில் வெளி​நாட்டு உயர் ரக மது பாட்​டில், அசைவ உணவு​கள், நொறுக்கு தீனிகள் சிதறிக் கிடந்​தன.

அங்கு யாரும் இல்​லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அரசு, அவற்றை செல்​போன் மூலம் வீடியோ எடுத்​தார். தொடர்ந்து காயமடைந்​தவரை அங்​கிருந்து அழைத்​துச் சென்​று, தனி​யார் மருத்​து​வ​மனை​யில் சேர்த்​தார்.

தற்​போது அந்த வீடியோவை சமூகவலை​தளங்​களில் பதி​விட்​டுள்​ளார். ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் மது விருந்​துடன் புத்​தாண்டு கொண்​டாடப்​பட்​ட​தாக புகார் எழுந்த நிலை​யில், அதுகுறித்து மாவட்ட சுகா​தார அலு​வலர் மீனாட்சி விசா​ரணை நடத்தி வரு​கிறார்.

ஆரம்ப சுகா​தார நிலை​யத்​தில் உள்ள சிசிடிவி கேம​ராக்​கள் பல மாதங்​களாக இயங்​க​வில்லை என்று கூறப்​படு​கிறது. இதுகுறித்து டிச. 31-ம் தேதி இரவுப் பணி​யில் இருந்த மருத்​து​வர் சசிக்​கு​மார் கூறும்​போது. “கடந்த ஓராண்​டாக இங்கு பணிபுரி​கிறேன்.

எனக்கு மது அருந்​தும் பழக்​கம் இல்​லை. அன்று மற்​றொரு கட்​டிடத்​தில் நான் உட்பட 3 பேர் பணி​யில் இருந்​தோம். இரவில் சிலருக்கு சிகிச்​சை​யும் அளித்​துள்​ளோம். அந்த அறை​யில் யாரோ வெளிநபர்​கள் வந்து மது அருந்​தி​யிருக்​கலாம்” என்​றார்.

ஹெச்​.​ராஜா கண்டனம்: பாஜக மூத்த தலை​வர் ஹெச்​.​ ராஜா தனது ‘எக்​ஸ்’ தள பதி​வில் “தி​முக ஆட்​சி​யில் பள்ளி வளாகம் தொடங்கி மருத்​து​வ​மனை வரை போதை பரவலாக்​கல் தொடர்​வது குறித்து தமிழக முதல்​வர் ஸ்டா​லின், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் சுப்​பிரமணி​யன் பதில் அளிப்​பார்​களா?” என்று பதி​விட்​டுள்​ளார்.

மாவட்ட சுகா​தார அலு​வலர் மீனாட்சி கூறும்​போது, “மருத்​து​வர்​கள், ஊழியர்​கள்​, வீடியோ எடுத்​தவர்​ போன்​றவர்​களிடம்​ முழு​மை​யாக வி​சா​ரித்​த பின்​னரே, என்​ன நடந்​தது என்​பது தெரிய​வரும்​" என்​றார்​.

SCROLL FOR NEXT