சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைய உள்ள இடம்.படம்: பி.ஜோதி ராமலிங்கம்
சென்னை: முதல்வர் விஜய் அறிவித்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்க சென்னை பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் உள்ள 25 ஏக்கர் வீட்டு வசதி வாரிய நிலம் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகம் கடும் இட நெருக்கடியில் இருப்பதால், தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையை வேறு இடத்துக்கு மாற்ற நீண்ட காலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராணுவத்துக்கு சொந்தமான புனித ஜார்ஜ் கோட்டையில்தான் தற்போது தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை இயங்கி வருகின்றன. அங்கு தலைமைச் செயலகத்தை விரிவாக்கம் செய்ய இந்திய தொல்லியல் துறை அனுமதி அளிப்பதில்லை. இதனால் இன்றும் கடும் இடநெருக்கடியில் தலைமைச் செயலகம் இயங்கி வருகிறது.
இந்நிலையில் முதல்வர் விஜய் கடந்த செப்.4-ம் தேதி 110 விதியின் கீழ் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடி பரப்பில் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, அரசு சார்பில் சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான ஃபோர்ஷோர் எஸ்டேட்டில் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்திட்டத்தை தொடங்குவதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் இத்திட்டத்துக்கு தனது 25.16 ஏக்கர் நிலத்தை வழங்கவும், சென்னை மாநகராட்சி, அதன் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வழங்கவும் இசைவு தெரிவித்துள்ளன. இத்திட்டத்துக்கான நிர்வாக ஒப்புதலை விரைவில் அரசு வழங்க உள்ளது.
இந்த புதிய தலைமைச் செயலக வளாகம் 15 தளத்தில் சுமார் 20 லட்சம் சதுரடி கட்டுமான பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இந்த இடத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ.2 ஆயிரம் கோடி.
அரசு சார்பில் முதலில் பட்டினப்பாக்கம், கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கம் ஃபின்டெக் சிட்டி அருகிலுள்ள இடம் ஆகிய 3 இடங்கள் பரிசீலிக்கப்பட்டது. இதில் 25 ஏக்கர் நிலம் கிடைப்பதால் பட்டினப்பாக்கம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு அருகே முதல்வர் விஜய்யின் இல்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலம் அரசு குடியிருப்புகள் அமைப்பதற்காக 1958-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.