சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டில்லிபாபு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும், பார் உரிமம் வழங்குவது, அனுமதிக்கப்படாத நேரங்களில் விற்பனை செய்வது என பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக கிடைத்த புகார்களின் அடிப்படையில் கடந்த 2017 முதல் 2024 வரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 41 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்குகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என்பதால் இந்த வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றவேண்டும்’’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், ‘‘இந்த 41 வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத் துறை மேற்கொண்ட சோதனைகளை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தடையுத்தரவு பெற்றுள்ளது. இந்தச்சூழலில் இந்த 41 வழக்குகளையும் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை நியாயமாக விசாரிக்கும் என எதிர்பார்க்க முடியாது என்பதால், இந்த வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும்’’ என வாதிடப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், ‘‘ஏற்கெனவே இதே கோரிக்கையுடன் கடந்த மே மாதமும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டும், மனுதாரர் இதுவரையிலும் சேர்க்கவில்லை’’ என்றார்.
அதையடுத்து, ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜன.22-க்கு தள்ளிவைத்துள்ளனர்.