சென்னை: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும் உதவிகளை வழங்க அவசர உதவி எண்களை முதல்வர் விஜய் அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் பலர் காணாமல் போனதாக வரும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். இந்த பேரிடரில் காணாமல் போன தமிழகத்தைச் சேர்ந்தவர்களை விரைந்து மீட்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல அரசு உயர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
மேலும் நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழகத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினர் உதவிக்கு 80690 09901 என்ற அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். அதேபோல் இந்தியாவுக்குள் 18003093793, வெளிநாட்டில் இருந்து +91 8069009900 எண்களைத் தொடர்பு கொள்ளலாம். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறைக்கு 92895 16712 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் உதவியைப் பெறலாம்.
இதற்கிடையே இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகம் ஆகியவற்றின் வாயிலாக, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெற்று, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் உஷார் நிலை
கங்கையின் கிளை நதிகள் கோசி, கண்டக் ஆகியவை நேபாளம் மற்றும் பிஹார் வழிகளில் ஓடுகின்றன. இவற்றில் கண்டக் நதி பிஹாரில் நாராயணி என்று அழைக்கப்படுகிறது. இந்த 2 நதிகளும் இமயமலையில் உருவாகி திபெத் வழியாக இந்தியாவுக்குள் நுழைகின்றன. இந்நிலையில், நேபாளத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் பிஹார் மாநிலம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஹார் முதல்வர் சம்ராட் சவுத்ரியுடன் அவசர ஆலோசனை நடத்தி, தேசிய பேரிடர் மீட்புப் படையினரைத் தயார் நிலையில் வைத்துள்ளார்.
திபெத் எல்லைப் பகுதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சீனா தனது முழு படைகளையும் மீட்புப் பணியில் களமிறக்கி உள்ளது. நேபாளத்தில் உள்ள சீனத் தூதரகம் அவசர கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கி இந்தியர்கள் மற்றும் சீனர்களை மீட்கும் பணியை ஒருங்கிணைத்து வருகிறது.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவ மழை காலத்தில் தெற்கு ஆசியாவில் ஏற்படும் இந்த பேரழிவுகளுக்குப் புவி வெப்பமயமாதலே (காலநிலை மாற்றம்) முக்கிய காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.