சுந்தர்.சி
மதுரை; ‘‘என்னுடைய மிகப் பெரிய பலமே மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன்தான். நாங்கள் பேச வேண்டியதை எல்லாம் அவர் பேசி வருகிறார். அவருக்கு மிகப் பெரிய நன்றி’’ என்று என்டிஏ கூட்டணி வேட்பாளர் சுந்தர்.சி தெரிவித்தார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “திமுகவினர் தங்களுக்கான திட்டங்களை மட்டும் எப்படியாவது நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆனால், மக்களுக்கான திட்டங்களில் கவனம் செலுத்துவதில்லை.
மதுரை மெட்ரோ ரயில் செயல்வடிவ திட்டத்தில் மாநில அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டிய நிறைய விஷயங்கள் இருந்தன. அதை எதையும் அவர்கள் செய்யாமல், ஐந்து ஆண்டுகள் ஆட்சியை முடித்துவிட்டு பழியை தூக்கி அப்படியே மத்திய அரசு மீது போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார்கள்.
இதுபோல், மதுரை விமான நிலையம், எய்ம்ஸ் போன்ற மதுரைக்கு வர வேண்டிய எத்தனையோ மத்திய அரசு திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டையை போட்டு தடுத்து அரசியல் செய்கிறார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் இதே மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசை மீறி சென்னைக்கு மட்டும் எப்படி கொண்டு வர முடிந்தது.
ஆனால், மதுரையில் திமுக ஆட்சியில் மெட்ரோ திட்டத்துக்கான ஆரம்ப கட்ட பணிகளுக்கான ஆவணங்களை கூட சமர்ப்பிக்கவில்லை. அப்படி இருக்கும்போது மத்திய அரசு மீது பழிபோடுவது இவர்களுடைய தகுதியின்மையைதான் காட்டுகிறது.
என்னுடைய மிகப்பெரிய பலம் என்ன என்று இன்று செய்தியாளர்கள் சிலர் கேட்டார்கள். அதற்கு நான் என்னுடைய எதிர்க்கட்சி வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன்தான் என்று சொன்னேன். மக்களுக்கு அவர் மீது இருக்கிற அதிருப்திதான் எனக்கு பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னேன். இப்போது நான் பேச வேண்டியதைல்லாம் என் சார்பாக அவரே ஏதோ ஒரு அதிருப்தியில் பேசிவிடுகிறார். அதற்கு அவருக்கு மிகப் பெரிய நன்றி. திமுக அரசு என்னனென்ன நல்லது செய்யவில்லையோ, அதை அவரே சரியாக சொல்லிவிடுகிறார்.
சில நாட்களுக்கு முன் இந்த ஆட்சியில் நானே நல்ல பணிகளை செய்ய முடியவில்லை, அதை வெளியே சொல்ல முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுள்ளார். சட்டப் பேரவையிலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை, அதிகாரிகள் கையில்தான் இருக்கிறது என்று தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளார். அதனால், முதல்வரால் தண்டிக்கப்பட்டுள்ளார்.
நாங்கள் பேச வேண்டிய விஷயங்களை அவரே பேசிக் கொண்டு இருக்கிறார். மக்களுக்கு தெரிய வேண்டிய உண்மைகளை எங்கள் சார்பாக அவரே கூறி வருகிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி” என்று சுந்தர்.சி கூறினார்.