கொருக்குப்பேட்டை பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள்

 
தமிழகம்

‘விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரை கைது செய்க’ - நயினார் நாகேந்திரன்

மு.சக்தி

சென்னை: “இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்வர் விஜய்யின் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளை கொச்சைப்படுத்தும் செயலாகும்.

புனிதமான விழாவை அரசியல் சுய லாப மேடையாக்கி, இறை வழிபாட்டை தேர்தல் பிரச்சாரமாக தரம் தாழ்த்தும் தவெக-வினரை முதல்வர் விஜய் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மவுனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.

எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை தவெக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT