நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்
சென்னை: திமுகவுக்கு வாக்களித்த மக்கள் குடும்பத்துடன் நிர்கதியாக நிற்கின்றனர் என திமுக அரசை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியின் கைப் பிடிச்சுவர் இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த துயரத்தில் இருந்தே தமிழகம் இன்னும் மீண்டு வராத நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 100 அரசுப் பள்ளிகளின் சுற்றுச்சுவர்கள் முற்றிலுமாக சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி விளம்பர விழா நடத்த நிதியிருக்கும் திமுக அரசுக்குப் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மனமில்லை என்பதற்கான மற்றொரு சான்று இது. எளிய பின்புலம் கொண்ட பிள்ளைகளின் புகலிடமாகத் திகழும் அரசுப் பள்ளிகளை எதற்கு இத்தனை அலட்சியத்துடன் ஆளும் திமுக அரசு கையாள்கிறது என்று புரியவில்லை.
அரசுப் பள்ளிகளில் குடிநீர் வசதி இல்லாததால் பள்ளிகளில் மாணவர்கள் ஊற்று தோண்டி தண்ணீர் குடிப்பதையும், கழிவறை இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க பிள்ளைகள் திறந்த வெளிகளை நாடுவதையும், சத்துணவில் புழு, பூச்சி, பல்லிகள் மிதப்பதையும், புதிய கட்டிடங்களின் மேற்கூரை பெயர்ந்துவிழுவதையும் கண்டு நமக்கு தான் நெஞ்சம் பதறுகிறதே தவிர, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் இவற்றையெல்லாம் அமைதியாக வேடிக்கைதான் பார்க்கிறார்கள்.
“அரசுப்பள்ளிகள் எனது கோட்டை” என்று பஞ்ச் வசனம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அமைதியாகப் பதுங்கிவிட்டார். “நான் உங்கள் அப்பா” என சென்டிமென்ட் வசனம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், விளம்பர போட்டோஷூட்களில் பிஸியாகிவிட்டார். இவர்களை நம்பி வாக்களித்த தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் நிற்கதியற்று நிற்கிறார்கள்.
அதுசரி, மக்கள் நலனைப்பேணுவதற்கா திமுக ஆட்சிக்கு வந்தது, கொள்ளையடிப்பவர்களிடம் கொத்து சாவியைக் கொடுத்தது தமிழகத்தின் மிகப்பெரிய வரலாற்றுப் பிழை. இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.