நயினார் நாகேந்திரன்
திருநெல்வேலி: “தேமுதிக உடன் கூட்டணி குறித்து இதுவரை எந்தவிதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியது: “கூட்டணி ஆட்சி என்பது தமிழகத்தில் சாத்தியமில்லை என முதல்வர் சொல்லி இருப்பது அவர்களது கூட்டணிக்காக இருக்கலாம். திமுக தொடர்ந்து அடுத்தடுத்த முறை ஆட்சிக்கு வந்தது கிடையாது. ஆட்சிக்கு அவர்கள் வர முடியாது என்ற நிலை இருக்கும்போது கூட்டணி ஆட்சி இருந்தால், என்ன இல்லாமல் போனால் என்ன என்ற அடிப்படையில் அவர் பேசியுள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். திமுகவுடன் காங்கிரஸ் தொடருமா அல்லது விஜய் கட்சியுடன் அவர்கள் செல்வார்களா என்பதுதான் கேள்விக்குறி. இருந்தாலும் கனிமொழி காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படி தமிழக முதல்வர் சொல்வதை பார்த்தால் அச்சமும் பயமும் திமுகவுக்கு வந்துவிட்டது.
திமுக ஆரம்ப காலத்தில் இருந்து தற்போது வரை ஸ்டிக்கர் ஒட்டும் முறையை பின்பற்றி வருகிறது. யாரோ கொண்டு வந்த திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என சொல்வது என்ன முறை என தெரியவில்லை.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பேசி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கும் நீட் தேர்வு குறித்த அச்சத்தை எடுத்துரைத்து, கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருந்தார்.
நேற்று முதலமைச்சராக கலைஞர், இன்று ஸ்டாலின், நாளை அவரது மகன் உதயநிதி முதல்வராக வருவார் என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். தமிழகத்தில் ஒருபோதும் குடும்ப ஆட்சி எடுபடாது. தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் பழனிசாமிதான். யார் தேர்தலில் அதிகம் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் இருக்கிறார்களோ அவர்கள்தான் அமைச்சர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது கொடுத்த நிதியை விட கூடுதலாக 300 மடங்கு தமிழகத்துக்கு நிதியை இந்த அரசு ஒதுக்கியுள்ளது. சாலை போக்குவரத்து, விமான நிலையங்கள், ரயில் போக்குவரத்து போன்றவற்றுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு திரும்பத் திரும்ப ஒரு பொய்யைச் சொல்லி உண்மையாக்க சித்தரிக்கிறார்கள். திமுக தோல்வி பயத்தால் மத்திய அரசிடம் இருந்து நிதி வரவில்லை, நிதி வரவில்லை என தொடர்ந்து சொல்லிவருகிறார்கள்.
ஒரு எம்பி கூட தமிழகத்தில் எதிர்க்கட்சியில் கிடையாது. உங்கள் நிர்வாகத்தில் என்ன செய்தீர்கள் என்பதை இதுவரை தெளிவுபடுத்தவில்லை. அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்குகள், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு, காவல் நிலைய மரணங்கள் அதிகரிப்பு என்று ஆட்சியில் காணப்படுகிறது.
தேமுதிக உடன் இதுவரை எந்தக் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பது மட்டுமே எங்களது இலக்கு. ஆட்சியில் பங்கு என்ற எந்த டிமாண்ட்டும் எங்களிடம் கிடையாது.
ஓபிஎஸ்ஸை அழைப்பது தொடர்பாக இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. சசிகலாவின் நிலைப்பாடு இதுவரை என்ன என்பது தெரியவில்லை. அவரது நிலைப்பாடு தெரிந்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரும் தேர்தலில் முதல்வராக விஜய் வருவார் என செங்கோட்டையன் சொல்கிறார். முதலில் அவர் கோபிசெட்டிபாளையத்தில் வெற்றி பெறட்டும். அதன் பிறகு பார்க்கலாம்” என்றார்.