நயினார் நாகேந்திரன்

 
தமிழகம்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா? - நயினார் நாகேந்திரன் பதில்

தமிழினி

சென்னை: “தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்கிறார். அதை கூட்டணியுடன் இணைத்துப் பேசுவது சரியாக இருக்காது,” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “வரவிருக்கின்ற தேர்தலில் திமுக தலையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என தமிழக மக்கள் எண்ணுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் இது தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமான தேர்தல் எனக் கூறியிருந்தார். ஆனால் நான், இது குடும்ப ஆட்சிக்கும், தமிழக மக்களுக்குமான தேர்தல் எனக் கூறி இருந்தேன்.

          

அதற்கான காரணம், விவசாயிகளின் கடனை ரத்து செய்வதாகக் கூறினார்கள் ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. டாஸ்மாக் ஊழல் கிட்டத்தட்ட மிகப்பெரிய எண்ணிக்கையில் போய்க் கொண்டிருக்கிறது. போதைப் பொருட்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. 2 வயது சிறுமியை கூட விட்டு வைக்காமல் வன்கொடுமை செய்கிறார்கள்.

தூத்துக்குடியில் பிளஸ் டூ மாணவியை அரக்கர்கள் ஒன்று சேர்ந்து வன்கொடுமை செய்து, கொலை செய்தனர். இது என்றைக்கோ ஒரு நாள் நடக்கக்கூடிய செய்தி அல்ல; தினம் தினம் இது மாதிரியான அவலங்கள் நடைபெறுகின்றன. கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய் வருவாரா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. நான் எனது தனிப்பட்ட கருத்தை கூற முடியாது. கரூர் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராக விஜய் டெல்லி செல்கிறார்; அவர் டெல்லி செல்வது இது முதல்முறையல்ல. உலகம் முழுவதும் போர் நடக்கிறது. ஆனால் இந்தியாவில் போர் இல்லை, தமிழகத்தில் தான் அக்கப்போராக இருக்கிறது. எல்லா பெட்ரோல் பங்க்கிலும் கூட்டம் இருப்பதாக திமுகவினர் கட்டமைக்கிறார்கள். அவர்களிடம் பண பலம், அதிகார பலம் இருக்கிறது என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT