பிரதமர் மோடியின் சாதனைகள் குறித்த சிறப்பு புத்தகங்களை நடிகர் ரஜினிகாந்திடம் நயினார் நாகேந்திரன் வழங்கினார். உடன் பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன், பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார். அண்ணாமலையின் அரசியல் பிரவேசம் குறித்து 45 நிமிடம் ஆலோசித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 12 ஆண்டுகால சாதனை ஆட்சியை மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தைப் பறைசாற்றும் வகையில், தமிழக பாஜக பல்வேறு சிறப்புக் களப்பணிகளை ஒருங்கிணைத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பிரதமரின் சாதனைகளை விளக்கும் தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான சிறப்புப் புத்தகங்களை பாஜக வெளியிட்டுள்ளது. இப்புத்தகங்களை தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களை நேரில் சந்தித்து பாஜக-வினர் வழங்கி வருகின்றனர்.
நேற்று, தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்துக்குத் திடீரென நேரில் சென்று, அவரை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜன் மற்றும் மாநிலப் பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
அப்போது, பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால சாதனைகள் குறித்த சிறப்பு புத்தகங்களை ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வழங்கினர். தொடர்ந்து, சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக மட்டுமில்லாமல், தமிழகத்தின் தற்போதைய பரபரப்பான அரசியல் சூழலை அலசும் விவாதமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழக முதல்வர் விஜய் மற்றும் தவெக-வின் நகர்வுகள், விஜய்யின் தற்போதைய அரசியல் செயல்பாடுகள் குறித்தும், அதிமுக-விலிருந்து விலகும் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைந்து வருவது குறித்தும் விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், அண்ணாமலையின் புதிய அரசியல் பிரவேசம் குறித்து நீண்ட நேரம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதாவது, பாஜக-விலிருந்து விலகி அண்ணாமலை புதிய அரசியல் அமைப்பைத் தொடங்கியிருப்பது, அந்த இயக்கத்தில் பாஜக-வினர் பலரும் தொடர்ந்து இணைந்து வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், அண்ணாமலையின் புதிய இயக்கத்தின் உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் குறித்தும் ரஜினியும், பாஜக தலைவர்களும் விவாதித்துள்ளனர்.
மேலும், அண்ணாமலையின் புதிய கட்சிக்கு ரஜினி ஆதரவு கொடுப்பார் என வெளியாகி வரும் தகவல்களை, ரஜினி மறுத்ததாகவும், அவர் யாருக்கும் ஆதரவு இல்லை என இந்த சந்திப்பின் போது தெளிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தமிழக அரசியல் களம் புதிய கூட்டணிகளையும் மாற்றங்களையும் நோக்கி நகர்ந்து வரும் வேளையில், பாஜக தலைவர்கள் ரஜினிகாந்தைச் சந்தித்து இந்த முக்கிய விவகாரங்களை விவாதித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.