தமிழகம்

நடிகர் ரஜினிகாந்துடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

வெற்றி மயிலோன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று திடீரென சந்தித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “இன்று சென்னை போயஸ் தோட்டத்தில், தாதாசாகேப் பால்கே விருது பெற்ற இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார், பத்மபூஷன் ரஜினிகாந்தை, பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளரும் தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளருமான அரவிந்த் மேனனுடன் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்தோம்.

அப்போது, பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த 12 ஆண்டுகால மக்கள் நல ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட முக்கிய வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டின் முன்னேற்றப் பயணத்தை எடுத்துரைக்கும் வகையில் வெளியிடப்பட்ட சிறப்பு நூல்களை அவருக்கு வழங்கி மகிழ்ந்தோம்.

இந்நிகழ்வில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் கராத்தே தியகராஜன் மற்றும் மாநில பிரச்சாரப் பிரிவு அமைப்பாளர் பாண்டியராஜ் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை சமீபத்தில் கட்சியிலிருந்து விலகி ’வீ தி லீடர்ஸ்’ என்ற இயக்கத்தை தொடங்கினார். அவர் விரைவில் அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில், ரஜினிகாந்தின் மனைவியான லதாவும் ’மக்கள் மேடை’ என்ற இயக்கத்தை தொடங்கியுள்ளார். இந்தச் சூழலில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ரஜினிகாந்தை சந்தித்துள்ளது எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT