நயினார் நாகேந்திரன் | கோப்புப் படம்
சென்னை: ‘கரூர் வெண்ணைமலையில் இனாம் நில உரிமை மீட்புப் பொதுக்கூட்டத்திற்காக மக்களுக்குத் துண்டுப் பிரசுரம் வழங்கிக் கொண்டிருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தினர் மீது திமுக நிர்வாகிகள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது’ என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கரூர் வெண்ணைமலையில் இனாம் நில உரிமை மீட்புப் பொதுக்கூட்டத்திற்காக மக்களுக்குத் துண்டுப் பிரசுரம் வழங்கிக் கொண்டிருந்த தமிழக விவசாயிகள் சங்கத்தின் இனாம் நில உரிமை மீட்புக் குழுவினரைத் தகாத வார்த்தைகளால் விமர்சித்த அப்பகுதி திமுக நிர்வாகிகள், அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
அதிலும், தடுக்க வந்த காவல்துறையினரைக் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், வயதானவர்கள் மீதும் பெண்கள் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்துமளவிற்கு அதிகார போதை தலைக்கேறிய குண்டர்களைக் கட்சியில் வைத்து அழகு பார்ப்பதற்குத் மு.க.ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும். கடந்த ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தைத் தங்கள் குடும்ப சொத்து போலவும், தமிழக மக்களைத் தங்களுக்கு வாய்த்த அடிமைகள் போலவும் நினைத்து ஆணவத்தில் ஆடிக்கொண்டிருக்கும்
திமுகவின் கொட்டம் அடங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. மே 4-ம் தேதிக்குப் பிறகு திமுக அரசு அரியணையில் இருந்து அகற்றப்படும். தமிழகம் மீட்டெடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.