திருநெல்வேலி: தவெக தலைவர் விஜய் வாக்குகளை பிரிப்பார், ஆனால் பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று, பாஜக மாநில தலைவரும் சாத்தூர் தொகுதி வேட்பாளருமான நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டை மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திருநெல்வேலி, சாத்தூர் ஆகிய இரு தொகுதிகளும் எனது இரண்டு கண்கள்.
ஒரு நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு மக்களுக்கு இந்த வாய்ப்பு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கிடைத்துள்ளது. அந்த வாய்ப்பாக இந்த நாள் அமைந்துள்ளது.
நாட்டின் நலன் கருதி, எதிர்கால சந்ததியின் நலன் கருதி தமிழகத்தில் போதை பொருட்கள் இல்லாமல் இருக்க வேண்டி, எதிர்கால சந்ததிகள் நல்ல முறையில் வாழ வழிகாட்டும் வகையில், விலைமதிப்பு இல்லாத வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்.
7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில் வாக்குச்சாவடிகளில் 500-க்கும் மேற்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்களிக்கிறார்கள். 5 ஆண்டுகளாக முதல்வராக இருந்த ஸ்டாலின் நல்லாட்சியை தரவில்லை என்பது கண்கூடாக தெரிகிறது.
சாத்தூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்புள்ளது. எல்லா மக்களும் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியாக வாக்களித்து வருகிறார்கள். மிகப்பெரிய எழுச்சி கிடைத்துள்ளது.
விஜய்யால் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகளை அவர் பிரிப்பார். அதனால் என்டிஏ மீண்டும் ஆட்சி அமைக்கும். பழனிச்சாமி முதல்வர் ஆவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.