பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
சென்னை: “தவெக அரசு கொடுத்த வாக்குறுதியின்படி ரூ.2,500 மகளிர் மாத உரிமைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மகளிர் உரிமைத் தொகையை தவெக அரசு மேலும் முடக்க நினைப்பது கடும் கண்டனத்துக்குரியது. தேர்தலின்போது தவெக அளித்த வாக்குறுதியின்படி ‘ரூ.2,500 மகளிர் மாத உரிமைத் தொகை’யை எப்பொழுது வழங்குவீர்கள் என்ற கேள்விக்கு, ‘தமிழகத்தின் நிதிநிலை தெரியுமா? ரெண்டு பிள்ளைங்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் செய்ய முடியுமா? முந்தைய ஆட்சியில் 2 வருடம் கழித்துத் தானே கொடுத்தார்கள், எங்களை மட்டும் ஏன் இப்போவே கேட்குறீர்கள்?’ என்றெல்லாம் அலட்சியத்துடன் பதிலளித்துள்ள வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு முற்றிலும் பொறுப்பற்றது.
முந்தைய அரசின் அட்டூழியங்களைப் பொறுக்க முடியாமல் தான், மாற்றம் தருவோம் என்று மன்றாடிக் கேட்ட தவெகவை மக்கள் அரியணையில் அமர்த்தினார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு ‘போன அரசு லேட்டாகத்தானே மகளிர் உரிமைத் தொகையை கொடுத்தது, நாங்கள் மட்டும் ஏன் சீக்கிரம் கொடுக்க வேண்டும்’ என்ற தொனியில் தவெக அமைச்சர் பேசுவது, ‘திமுகவும் தவெகவும் வெவ்வேறு இல்லை’ என்ற உண்மையை மீண்டுமொருமுறை உரக்க உணர்த்துகிறது. நம்பி வாக்களித்த மகளிரை அவமதிப்பது போலானது.
அதிலும் ஏதோ புதியதாக கண்டுபிடித்ததைப் போல தமிழகம் கடனில் இருக்கிறது என்று கூறி, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தவெக அரசு கிடப்பில் போட முயல்வது, ஏமாற்றுத் தனத்தின் உச்சம்.
தேர்தல் அறிக்கையைத் தயார் செய்கையில் தமிழகத்தின் நிதிநிலை என்னவென்பது தவெகவிற்கு தெரியாதா? ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கையைக் கூட வாசிக்காமல் தான், ‘ஒரே ஒரு வாய்ப்பு கொடுங்கள்’ என்று முதல்வர் விஜய் மக்களிடம் கெஞ்சிக் கேட்டாரா? யாரை ஏமாற்ற முயற்சிக்கிறது தவெக அரசு?
எனவே, இதுபோன்ற சாக்கு போக்குகள் எல்லாம் இனி இங்கே எடுபடாது. கொடுத்த வாக்கின்படி ரூ.2,500 மகளிர் மாத உரிமைத் தொகையை உடனடியாக வழங்க முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.