புதுச்சேரி: “புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு வழங்கும்” என்று புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது; முதல்வர் ரங்கசாமியின் சர்வாதிகாரப் போக்குக்கு அமைச்சரவையோ, சட்டமன்றமோ தேவையில்லை. அவர் ஒருவர் மட்டுமே அரசு நிர்வாகத்தை நடத்துவார்.
புதுச்சேரியில் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். இடைத்தேர்தலில் நட்பு போட்டிக்கு வாய்ப்பில்லை. விஜய் கட்சியான தவெகவை திமுக குறைவாக மதிப்பிடுவது தான் தோல்விக்கு காரணம்.
நாங்கள் நட்பு ரீதியாக போட்டியிட்ட தொகுதிகளில் திமுக தான் வெற்றி பெற்றுள்ளது. தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். புதுவையில் கூட்டணிக்கு திமுகதான் தலைமை தாங்கியது. அதனால் தோல்விக்கும் திமுகவே காரணம். கூட்டணி தலைமையை திமுகவே எடுத்து கொண்டது. கூட்டணி கட்சிகளிடம் தன்னிச்சையாக திமுக பேச்சுவார்த்தை நடத்தியது.
தட்டாஞ்சாவடியில் தவெக போட்டியிட்டால் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும். தட்டாஞ்சாவடி தொகுதி முதல்வர் தொகுதி என வாக்களித்தனர். ஆனால் அந்த தொகுதியை முதல்வர் ராஜினாமா செய்துள்ளதால், அந்தத் தொகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.